செய்திகள்
ஆந்திரா, உத்தரகாண்ட் மாநிலங்களிலும் ஊரடங்கு நீட்டிப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் மளிகைக் கடைகள் வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது ஜூன் 1 மற்றும் ஜூன் 7ம் தேதிகளில் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமராவதி:
கொரோனா வைரசின் 2வது அலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகின்றன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதால் பல்வேறு மாநிலங்களில் தொற்று குறைந்துள்ளது. சூழலுக்கு ஏற்ப மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்கின்றன.
அவ்வகையில் ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு உத்தரவு ஜூன் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அலுவலகம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் ஜூன் 9ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜூன் 9ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மளிகைக் கடைகளை வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது ஜூன் 1 மற்றும் ஜூன் 7ம் தேதிகளில் திறக்கலாம், தினமும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகளை திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தக கடைகள் மற்றும் ஸ்டேசனரி கடைகள் ஜூன் 1ம் தேதி மட்டும் திறக்கலாம் என அமைச்சர் சுபோத் உனியால் தெரிவித்தார்.
கொரோனாவால் மரணம் அடையும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அதற்குரிய பணத்தை அரசு வழங்கும் என்றும் உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.