செய்திகள்
பா.ஜ.க.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் பலவீனப்படுத்துகிறது - பாஜக குற்றச்சாட்டு

Published On 2021-05-29 19:18 GMT   |   Update On 2021-05-29 19:18 GMT
கொரோனாவுக்கு எதிரான போர் தொடர்பாக காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் பரஸ்பரம் ஒன்றின் மீது மற்றொன்று குற்றம் சாட்டி வருகின்றன.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா காணொலி காட்சி வழியாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத், இந்தியா பெரியது அல்ல, ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இழிவான நாடாகி இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? இந்தியாவை அவமதிப்பது அந்தக் கட்சி தலைவர்களின் முன்னுரிமையாகி விட்டது.
ஏற்கனவே கமல்நாத் உருமாறிய கொரோனாவை இந்தியா கொரோனா என குறிப்பிட்டுள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தூண்டுதலால்தான் இப்படிப் பேசி வருகிறார்.

கமல்நாத் சொல்வது காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம். அதுதான் சோனியாவின் சித்தாந்தமும் கூட. இந்தியாவின் மீது அவதூறு கூறுவதுதான் இவர்களின் முன்னுரிமை ஆகி உள்ளது. இப்படி வெறுக்கத்தக்க கருத்தைக் கூறியும் சோனியா காந்தி ஏன் அமைதியாக இருக்கிறார்? கமல்நாத்தின் கருத்து சோனியா காந்திக்கு ஏற்புடையதுதானா?
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, சசிதரூர் போன்றோர் கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.

பாகிஸ்தான் ஊடக அறிக்கையில் இந்திய கொரோனா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் அந்த வார்த்தை காங்கிரஸ் கட்சியின் தலைமையிடத்தில் உருவானதுதான். பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவின் மீது குறி வைக்க பயன்படுத்துவதற்கான கருவிகளை எதிர்க்கட்சி வழங்கி வருகிறது.

பிரதமர் மோடி சமீபத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் சுகாதார பணியாளர்கள் பங்கு பற்றி பேசுகையில் உணர்ச்சி வசப்பட்டார். இதை நாடகம் என்று சொல்வதா? என குற்றம்சாட்டியுள்ளார்.
Tags:    

Similar News