செய்திகள்
காணொளி வாயிலாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி

கொரோனாவின் தீவிரம் இன்னும் அவர்களுக்கு புரியவில்லை... மத்திய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்

Published On 2021-05-28 08:27 GMT   |   Update On 2021-05-28 12:22 GMT
ஊரடங்கு உத்தரவு போட்டு கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் முக கவசங்கள் அணிவது கொரோனாவுக்கு எதிரான தற்காலிக தீர்வு என ராகுல் காந்தி கூறினார்.
புதுடெல்லி:

மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், ராகுல் காந்தி இன்று காணொளி வாயிலாக பத்திரிகையாளர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் குறித்து மத்திய அரசுக்கு நாங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தோம். பின்னர், கொரோனாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்த நோய் தொடர்ந்து பரவி வரும் நோய். கொரோனாவை தடுக்க மூன்று நான்கு வழிகள் உள்ளன. அதில் தடுப்பூசி தான் கொரோனாவுக்கு நிரந்தர தீர்வாகும். ஊரடங்கு உத்தரவு போட்டு கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் முக கவசங்கள் அணிவது தற்காலிக தீர்வுதான். 



கொரோனா இரண்டாவது அலை இந்த அளவுக்கு பரவுவதற்கு பிரதமரின் அணுகுமுறைதான் காரணம். இப்போது வரை பிரதமரோ மத்திய அரசோ கொரோனாவின் தீவிரத்தை புரிந்துகொள்ளவில்லை. தற்போது தெரிவிக்கப்படும் இறப்பு விகிதம் பொய். அரசாங்கம் உண்மையைச் சொல்ல வேண்டும்.

கொரோனாவுக்கு எதிராக போராடுவதன் தன்மையை அரசு புரிந்து கொள்ளவில்லை. இந்த வைரசின் பிறழ்வுகள் ஏற்படுத்தும் ஆபத்துகளைப் புரிந்து கொள்ளுங்கள். 3 சதவீதம் மட்டுமே தடுப்பூசி போடுவதால், 97 சதவீத மக்கள் வைரசால் பாதிக்கப்படுவதற்கு அனுமதிக்கிறீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News