செய்திகள்
தவறான தகவல்களை தொடர்ந்து பகிர்வோர் மீது மிகக்கடுமையான நடவடிக்கை - பேஸ்புக் நிறுவனம்
கொரோனா தடுப்பூசி மற்றும் பாதிப்பு, பருவநிலை மாற்றங்கள், தேர்தல் போன்ற தீவிரத்தன்மை மிகுந்த தகவல்களை தவறாக பகிரும் நபர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:
தவறான தகவல்களை பதிவிடுவோருக்கு, அதை பதிவிட்டமைக்காக எச்சரிக்கை செய்தி அனுப்பும் வழக்கம் பேஸ்புக்கில் இருக்கிறது. தற்போது இந்த எச்சரிக்கைக்கு அடுத்தபடியாக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எச்சரிக்கை செய்தும் கூட, மாற்றங்களுக்குட்பட்டு பயனாளருக்கு எளிதில் புரியும்படியாக அமைக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேஸ் புக் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா தடுப்பூசி மற்றும் பாதிப்பு, பருவநிலை மாற்றங்கள், தேர்தல் போன்ற தீவிரத்தன்மை மிகுந்த தகவல்களை தவறாக பகிரும் நபர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட அந்த பயனாளரின் பதிவுகள், வெகுஜன மக்களை அடையாதபடி நாங்கள் பார்த்துக்கொள்வோம். முன்னராக குறிப்பிட்ட பதிவு தவறானது என்பது எங்களுக்கு தெரியவந்தால், அந்த ஒரு பதிவு மேற்கொண்டு பயனாளர்களை அடையாமல் இருக்க வழிமுறைகளை செய்திருக்கிறோம். இப்போது அதன் அடுத்தகட்டமாக பயனாளரின் பிற பதிவுகளும் வராமல் தடுக்கிறோம்.
எங்களின் தளத்துக்கு வரும் ஒரு பயனாளி, ஒரு சமூக வலைதள பக்கத்தை லைக் செய்கிரார் என்றால், அவர் லைக் செய்யும் முன்னராகவே, அந்த பக்கத்திலுள்ள தகவல் சரிபார்க்கப்பட்ட - நம்பத்தகுந்த பதிவுகள் அவருக்கு காட்டப்படும். அதற்கான பாப்-அப் ஒவ்வொரு பேஸ்புக் பக்கத்துக்கும் வழங்கப்படும். அந்த பாப்-அப் ஐ கண்டபிறகே, பயனாளி அதை லைக் செய்வதா வேண்டாமா என்பதை முடிவுசெய்வார். அப்பக்கத்தின் தவறான தகவல்களின் எண்ணிக்கை அல்லது விவரங்களும் பயனாளிக்கு காண்பிக்கப்படும் என்பதால், பயனாளிக்கு அப்பக்கததை பற்றிய தெளிவான பார்வை கிடைக்கும்" என்று கூறியுள்ளது.