செய்திகள்
செங்கோட்டை முற்றுகை

செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டது இதற்குத்தான் -குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்

Published On 2021-05-27 09:14 GMT   |   Update On 2021-05-27 09:14 GMT
உலகம் முழுமைக்கும் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப ஜனவரி 26ந்தேதியை அவர்கள் தேர்ந்தெடுத்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்திய விவசாயிகள், குடியரசு தினத்தன்று டெல்லி நோக்கி பேரணி நடத்தினர். பேரணியில் விவசாயிகளில் ஒரு தரப்பினர் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட பகுதிகளை மீறி தடுப்புகளை உடைத்து கொண்டு முன்னேறினர்.

இதன்பின்னர் விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டு, தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர். அப்போது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.



டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், விவசாயிகள் கடுமையாக தாக்கியதில் 83 போலீசார் காயம் அடைந்தனர்.  கிழக்கு டெல்லி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதற்காக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.  8 பேருந்துகள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டது.  இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  25 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார் டெல்லி செங்கோட்டை முற்றுகை பற்றி குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், செங்கோட்டை முற்றுகையால், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக உலக அளவிலான அவதூறு ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“திட்டமிட்டபடி விவசாயிகள் அதிக அளவில் செங்கோட்டைக்குள் நுழைந்தனர். பல மணிநேரம் உள்ளேயே தங்கிவிட்டனர்.  டெல்லி செங்கோட்டையை கைப்பற்றி, அதனை தங்களுடைய புதிய போராட்டக்களம் ஆக்குவதற்கு விவசாயிகள் விரும்பினர். உலகம் முழுமைக்கும் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப ஜனவரி 26ந்தேதியை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

இதற்காக கடந்த நவம்பர்-டிசம்பரில் அவர்கள் திட்டமிட்டனர். அரியானா மற்றும் பஞ்சாப்பில் எண்ணற்ற டிராக்டர்களை இதற்காக வாங்கி உள்ளனர்” என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

செங்கோட்டையில் தங்கள் கொடியை ஏற்றுவோருக்கு பெரும் தொகை வழங்கப்படும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறை தனது குற்றப்பத்திரிகையில் சுட்டிக் காட்டி உள்ளது. 

Tags:    

Similar News