செய்திகள்
இது தனியுரிமையை பாதிக்கும்- மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது வாட்ஸ்அப்
புதிய விதிகள் தனியுரிமை தகவல் பாதுகாப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறி உள்ளது.
புதுடெல்லி:
சமூக வலைத்தள நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கு புதிய டிஜிட்டல் விதிமுறைகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு 3 மாத அவகாசமும் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்றுக்கொள்வதாக பேஸ்புக், யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் தெரிவித்தன. இந்த விதிகளை சமூக ஊடகங்கள் ஏற்றுக்கொள்வதற்காக காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், மத்திய அரசின் புதிய விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் நிர்வாகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
பயனர்களின் தரவுகளை கண்காணித்து, சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்புவோரின் விவரங்களை உடனடியாக அரசுக்கு தெரிவிக்குமாறும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புதிய விதிமுறைகளில் உள்ளது.
இந்த புதிய விதியானது, பயனர்களின் தனியுரிமை தகவல் பாதுகாப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருப்பதாகவும் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் விதிகளை முறியடிக்கும் வகையில் இருப்பதாகவும் தனது மனுவில் வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.