மத்தியபிரதேசம் முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் மீது வழக்கு
போபால்:
மத்தியபிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கமல்நாத் பேசியதாவது:-
நாட்டில் கொரோனா வைரஸ் தலைவிரித்தாடுகிறது. என்னுடைய மதிப்பீட்டின்படி, போபால் மற்றும் இதர பகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்து இருப்பார்கள்.
இங்கு பரவி வருவது இந்திய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ். 2-ம் அலையில் இந்தியாவில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா 2-ம் அலை காரணமாக பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு இடையேயான விமானப் போக்குவரத்தை ரத்து செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் கமல் நாத்தின் இந்தக் கருத்துக்கு மத்தியபிரதேச பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்திய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் என்று கூறியதற்காக, மத்தியபிரதேச மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங்க் கொடுத்த புகாரின் பேரில் கமல்நாத் மீது போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.