செய்திகள்
கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக விடி சதீசன் நியமனம்
கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸைச் சேர்ந்த வி.டி.சதீசனை டெல்லி காங்கிரஸ் தலைமை நியமனம் செய்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் 140 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து அந்த மாநில முதல்-மந்திரியாக பினராயி விஜயன் நேற்று முன் தினம் மீண்டும் பதவியேற்றார். அவருடன் 20 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. இந்த நிலையில் கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸைச் சேர்ந்த வி.டி.சதீசனை டெல்லி காங்கிரஸ் தலைமை நியமனம் செய்துள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவராக ரமேஷ் சென்னிதலா செயல்பட்டார். எனவே, இந்தமுறையும் அவர் எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக வி.டி.சதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சதீசன் எர்ணாகுளம் மாவட்டம், பறவூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-ஆக தேர்வு செய்யப்பட்டவர்.
அத்துடன் இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்ட வி.டி.சதீசனுக்கு ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி 41 இடங்களிள் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.