செய்திகள்
கோவா கடலோர பகுதிகளை தாக்கியது டவ்-தே புயல்- சூறைக்காற்றுடன் கனமழை
டவ்-தே புயல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் 12 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது.
திருவனந்தபுரம்:
அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் காரணமாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்துவருகிறது. கடும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததார், பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகள் சேதமடைந்துள்ளன.
வடக்கு நோக்கி தொடர்ந்து நகரும் டவ்-தே புயல், நாளை மாலை குஜராத் கடலோர பகுதியை தாக்கும் என்றும், போர்பந்தர்-மகுவா இடையே 18ம்தேதி காலையில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை டவ்-தே புயல் கோவா கடலோர பகுதிகளை தாக்கியது. இதன்காரணமாக கடுமையான காற்றுடன் கனமழை பெய்கிறது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்தன. இன்று பிற்பகலுக்குள், புயலின் மையம் கோவாவின் வடமேற்கு திசையில் இருக்கும் என்றும், நாள் முழுவதும் காற்றுடன் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டவ்-தே புயல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் 12 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. இதவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 73 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.