செய்திகள்
கோப்புப்படம்

மாநகராட்சி பட்டியலுடன் வேறுபாடு- 4,783 பேர் மரணங்களை மறைத்த டெல்லி அரசு

Published On 2021-05-16 02:55 GMT   |   Update On 2021-05-16 02:55 GMT
பா.ஜனதா கையில் உள்ள டெல்லி மாநகராட்சி அளித்துள்ள கொரோனா பலி பட்டியலும், ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு அளித்துள்ள பட்டியலும் முரண்பாடாக இருக்கிறது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.

பெரும்பாலான மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்தது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவியது. இதனால் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மராட்டியத்திற்கு அடுத்து அதிகமாக இருந்தது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பலரது உடல்கள் ஒரே இடத்தில் வைத்து எரிக்கப்பட்டன.

இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை டெல்லி அரசு மறைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி முதல் மே 11-ந் தேதி வரை 24 நாட்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,050 பேர் என்று டெல்லி அரசு பதிவு செய்துள்ளது.

ஆனால் அந்த 24 நாட்கள் கால கட்டத்தில் கொரோனா வைரசால் பலியான 12 ஆயிரத்து 833 பேரின் உடல் தகனம் மற்றும் அடக்கம் நடந்துள்ளதாக மாநகராட்சி பதிவேட்டில் உள்ளது. சராசரியாக ஒருநாளைக்கு 534 இறுதிச் சடங்குகள் நடந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநகராட்சி பதிவேட்டுடன் ஒப்பிடும் போது டெல்லி அரசு தெரிவித்துள்ள கொரோனா உயிரிழப்பு புள்ளி விவரங்கள் வேறுபாடுகளுடன் உள்ளது.


கொரோனாவால் உயிரிழந்த 4,783 பேர்களை டெல்லி அரசு மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. பா.ஜனதா கையில் உள்ள டெல்லி மாநகராட்சி அளித்துள்ள கொரோனா பலி பட்டியலும், ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு அளித்துள்ள பட்டியலும் முரண்பாடாக இருக்கிறது.

கொரோனா பலிகளை டெல்லி வேண்டுமென்றே மறைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வடக்கு டெல்லி மாநகராட்சி மேயர் ஜெயபிரகாஷ் கூறும்போது, கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்தே டெல்லி அரசு வைரசால் இறந்தவர்களின் புள்ளி விவரங்களை மறைத்து வருகிறது.

தகனங்களுக்கு விறகு வாங்குவதற்கான எங்கள் கோரிக்கையை அவர்கள் புறக்கணித்ததோடு மட்டுமல்லாமல் எங்கள் கோவிட் மருத்துவமனைகளில் இருந்து இறுதி செய்யும் சடங்குகள் வரை எல்லா இடங்களிலும் மருத்துவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான நிதியிலும் அவர்கள் தலையிட்டுள்ளனர் என்றார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, சந்தேகத்திற்குரிய கொரோனா வழக்குகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்கள் உள்ள நோயாளிகள், டெல்லி அல்லாத குடியிருப்பாளர்கள் ஆகியோரை அரசாங்கம் இறப்பு எண்ணிக்கையில் இருந்து விலக்குகிறது என்றார்.

Tags:    

Similar News