செய்திகள்
கொலை

காதலனுடன் சேர்ந்து தாயை கொன்று நாடகமாடிய மகள் கைது

Published On 2021-05-15 04:06 GMT   |   Update On 2021-05-15 04:06 GMT
ஆந்திர மாநிலத்தில் திருமணத்துக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து தாயை கொன்று நாடகமாடிய மகளை போலீசார் கைது செய்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் சவரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசராவ். எல்.ஐ.சி. முகவர். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இளைய மகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார்.

மூத்த மகள் ரூபாஸ்ரீ பார்மசி படித்து வருகிறார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த வருண்சாய் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதல் விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோருக்கு தெரியவந்தது. காதலனையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக ரூபாஸ்ரீ கூறினார். இதற்கு ரூபாஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் ரூபாஸ்ரீக்கு மணமகன் தேடும் பணியில் அவரது பெற்றோர் ஈடுபட்டனர். ஆனால் ரூபாஸ்ரீ தனக்கு வேறு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி புறக்கணித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 6-ந்தேதி ரூபாஸ்ரீ தனது தாய் லட்சுமி மூச்சுபேச்சு இல்லாமல் கிடப்பதாக கூறி அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்து தகரபுவலசாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு லட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சீனிவாசராவ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் லட்சுமி உடலை பிரேத பரிசோதனை செய்ததில் லட்சுமி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் லட்சுமி வசித்து வந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது கொலை நடந்த நாளில் ரூபாஸ்ரீயின் காதலன் வருண்சாய் அப்பகுதியில் சம்பந்தமில்லாமல் சுற்றித்திரிந்தது தெரிந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் ரூபாஸ்ரீ, வருண்சாயிடம் கொலை நடந்த நாளில் பேசிய உரையாடல்களை ஆய்வு செய்ததில் இருவரும் சேர்ந்து லட்சுமியை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது.


தொடர்ந்து போலீசார் ரூபாஸ்ரீ, வருண்சாய் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ரூபாஸ்ரீ, வருண்சாய் ஆகியோரின் திருமணத்திற்கு அவர் தடையாக இருந்ததாகவும் அதனால் அவரை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

அதன்படி கடந்த 6-ந்தேதி தந்தை சீனிவாசராவ் வேலைக்கு சென்றபின் தனது காதலன் வருண்சாயை வீட்டிற்கு அழைத்து வந்த ரூபாஸ்ரீ தனது தாய் லட்சுமி தூங்கி கொண்டிருந்தபோது இருவரும் சேர்ந்து கைகளை ஒன்றாய் பிடித்து வாய் மற்றும் மூக்கை துணியால் அமுக்கி கொலை செய்து விட்டு தனது தாய் மயங்கிய நிலையில் உள்ளதாகவும் என்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டு நாடகமாடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரூபாஸ்ரீ, வருண்சாய் இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News