செய்திகள்
விவசாயிகளுக்கு 8வது தவணை நிதியுதவி- பிரதமர் மோடி வழங்கினார்
அக்சய திரிதியை புனித நாளான இன்று, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.19000 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயை 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இப்பணம் செலுத்தப்படுகிறது.
அவ்வகையில், விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் 8-வது தவணைத் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவித்தார். இதன்மூலம் விவசாய குடும்பங்களின் வங்கிக்கணக்கில் ரூ.19 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.
காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ‘அக்சய திரிதியை புனித நாளான இன்று, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.19000 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 10 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். முதல் முறையாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த திட்டத்தின்கீழ் பயனடைய உள்ளனர்’ என குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றுநோயின் கடினமான சவால்களுக்கு மத்தியில், விவசாயம் மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றில் விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர். அதேசமயம், அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதரவு விலையில் 10 சதவீதம் கூடுதல் கோதுமை வாங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.