செய்திகள்
கோப்புப்படம்

ஆகஸ்டு மாதத்துக்குள் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி 10 கோடியாக உயரும்

Published On 2021-05-13 01:52 GMT   |   Update On 2021-05-13 01:52 GMT
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துகிற நிலையில், பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி:

ஆகஸ்டு மாதத்துக்குள் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி 10 கோடி டோஸ்களாகவும் கோவேக்சின் உற்பத்தி 8 கோடி டோஸ்களாகவும் அதிகரிக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துகிற நிலையில், பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்துவதற்கு தடுப்பூசி இருப்பு போதுமான அளவுக்கு இல்லை என்பதால் பல மாநில அரசுகள் இந்த திட்டத்தை தள்ளி வைத்துள்ளன.

தடுப்பூசி தட்டுப்பாட்டைப் போக்கும் விதத்தில் உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் புனே இந்திய சீரம் நிறுவனத்திடமும், கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் ஐதராபாத் பாரத் படோடெக் நிறுவனத்திடமும், அவ்விரு நிறுவனங்களின் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான தடுப்பூசி தயாரிப்பு திட்டம் பற்றி மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகமும் கேள்வி எழுப்பின.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் வி.கிருஷ்ண மோகன் அளித்த பதிலில், தடுப்பூசி உற்பத்தி ஜூலையில் 3.32 கோடியாக இருக்கும், ஆகஸ்டில் 7.82 கோடியாக உயர்த்தப்படும் எனவும், செப்டம்பரிலும் 7.82 கோடி என்பது பராமரிக்கப்படும் எனவும் கூறி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதேபோன்று இந்திய சீரம் நிறுவனத்தின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங், ஆகஸ்டில் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி 10 கோடியாக உயர்த்தப்படும் எனவும், இதுவே செப்டம்பர் மாதமும் தொடரும் எனவும் கூறி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News