செய்திகள்
பிரியங்கா காந்தி

போதிய தடுப்பூசிகள் அளிக்காததால் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது - பிரியங்கா குற்றச்சாட்டு

Published On 2021-05-12 19:29 GMT   |   Update On 2021-05-12 19:29 GMT
தடுப்பூசி திருவிழா நடத்திய மோடி அரசு, போதிய தடுப்பூசிகள் அளிக்காததால், தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று பிரியங்கா குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி:

தடுப்பூசி திருவிழா நடத்திய மோடி அரசு, போதிய தடுப்பூசிகள் அளிக்காததால், தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று பிரியங்கா குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அதிக அளவிலான தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடு, இந்தியா. கடந்த மாதம் 11-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை பா.ஜனதா அரசு ‘தடுப்பூசி திருவிழா’ நடத்தியது. அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதே இதன் நோக்கம்.

ஆனால், மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசிகளை ஏற்பாடு செய்ய மோடி அரசு தவறி விட்டது. இதனால், கடந்த 30 நாட்களில் தடுப்பூசி போட்ட பயனாளிகள் எண்ணிக்கையில் 82 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, தடுப்பூசி உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு நேரில் சென்றார். புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆனால், அவரது அரசு தடுப்பூசிக்கான முதலாவது ஆர்டரை மிக தாமதமாக கடந்த ஜனவரி மாதம்தான் கொடுத்தது.

அமெரிக்கா போன்ற நாடுகள், இந்திய நிறுவனங்களிடம் நீண்ட காலத்துக்கு முன்பே ஆர்டர் கொடுத்து விட்டன. இதற்கு யார் பொறுப்பு ஏற்பது? ஒவ்வொரு குடும்பத்தையும் தடுப்பூசி சென்றடையாமல், கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவது சாத்தியம் அல்ல.

இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளாா்.

கடந்த மாதம் 12-ந் தேதியும், இம்மாதம் 9-ந் தேதியும் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை ஒப்பிட்டு ஒரு வரைபடத்தை பிரியங்கா வெளியிட்டுள்ளார்.

மேலும், தடுப்பூசி போடும் பணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி, பிரான்ஸ் ஆகிய நாடுகளை விட பின்தங்கியநிலையில் இந்தியா இருப்பதை காட்டும் வரைபடத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News