செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட மகள் உடலை 35 கி.மீ. சுமந்து சென்ற தந்தையின் பரிதாபம்
தற்கொலை செய்து கொண்ட மகளின் உடலை, உடற்கூறு செய்வதற்காக உறவினர்களுடன் 35 கி.மீ. தூரம் நடந்தே எடுத்துச் சென்ற பரிதாப நிலை ஒரு தந்தைக்கு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குக்கிராமம் கடாய். இந்த கிராமத்தில் திரிபாதி சிங் கோந்த் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் (வயது 16) கடந்த 5-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசாருக்கு திரிபாதி தகவல் தெரிவித்தார்.
போலீசார் திரிபாதி வீட்டிற்கு வந்து உடலை பார்த்து, ரிப்போர்ட் எழுதிய பின, உடலை உடற்கூறு செய்யும் மருத்துவமனைக்கு கொண்டு வாருங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
ஆனால் வறுமையால் வாடிய திரிபாதிக்கு உடலை வாடகை வாகனத்தில் கொண்டு செல்லும் அளவிற்கு பணம் இல்லை. இதனால் கட்டிலில் மகளின் உடலை வைத்து தொட்டில் போன்று கட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலரின் உதவியுடன் 34 கிலோ மீட்டர் தூரம் சுமந்து கொண்டு சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து திரிபாதி சிங் கோந்த் ‘‘நாங்கள் காலை 9 மணிக்கு உடலை சுமக்க தொடங்கினோம். மாலை 4 மணிக்கு மருத்துவமனையை சென்றடைந்தோம். தோளில் வைத்து சுமந்து சென்றதால், நாங்கள் சோர்வடைந்துள்ளோம். இது மிகப்பெரிய பிரச்சினை. ஆனால் யாரும் தீர்வ காண தயாராக இல்லை’’ என்று பரிதாபமாக கூறினார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி அருண் சிங் என்பவர் ‘‘உடற்கூறு செய்யும் இடத்திற்கு உடலை எடுத்துச் செல்ல வாகனம் வாடகைக்கு அமர்த்த பட்ஜெட் ஒதுக்கவில்லை. இதனால் வாகனம் ஏற்பாடு செய்ய வாய்ப்பில்லை’’ என்று சர்வசாதாரணமாக தெரிவித்தார்.