செய்திகள்
கோப்புபடம்

குஜராத் மாநிலத்திற்கு மேலும் 8.98 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல்

Published On 2021-05-09 01:58 GMT   |   Update On 2021-05-09 01:58 GMT
குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு இதுவரை 1.39 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி அனைத்து மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்த பிறகு, தடுப்பூசி செலுத்துவதற்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. தடுப்பூசிகளை தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் நாட்டில் உள்ள மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 17.49 கோடி தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளதாக கூறுகிறது. 

இதில் 16.7 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 84 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கைவசம் உள்ளன என்றும் கூறுகிறது. இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இன்னும் 3 நாளில் 53 லட்சத்து 25 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் குஜராத்துக்கு அதிகபட்சம் 8.98 லட்சம் தடுப்பூசி வினியோகிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது நாட்டிலேயே அதிக எண்ணிக்கை ஆகும். ஏற்கனவே இந்த மாநிலத்துக்கு 1.39 கோடி தடுப்பூசி வழங்கி 1.35 கோடி டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News