செய்திகள்
சித்தராமையா

கர்நாடகத்திற்கு தினமும் 1,500 டன் ஆக்சிஜன் ஒதுக்க வேண்டும்: சித்தராமையா வலியுறுத்தல்

Published On 2021-05-08 02:16 GMT   |   Update On 2021-05-08 02:16 GMT
கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜனை முழுமையாக கர்நாடகத்திற்கே ஒதுக்க வேண்டும், மாநிலத்திற்கு குறைந்தது தினமும் 1,500 டன் ஆக்சிஜன் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

கர்நாடக ஐகோர்ட்டு, நமது மாநிலத்திற்கு தினமும் 1,200 டன் ஆக்சிஜன் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய பா.ஜனதா அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன்.

கர்நாடகத்திற்கு தினமும் 1,700 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு 965 டன் ஆக்சிஜன் மட்டுமே ஒதுக்கியுள்ளது. இதனால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்த அபாயத்தை சுப்ரீம் கோர்ட்டு தடுத்துள்ளது.

பிரதமர் மோடி இப்போதாவது பாடம் கற்க வேண்டும். மக்களின் உயிர்களுடன் விளையாடுவதை அவர் நிறுத்த வேண்டும். கர்நாடகத்திற்கு தேவைப்படும் அளவுக்கு ஆக்சிஜனை மத்திய அரசு வழங்க வேண்டும்.

கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜனை முழுமையாக கர்நாடகத்திற்கே ஒதுக்க வேண்டும், மாநிலத்திற்கு குறைந்தது தினமும் 1,500 டன் ஆக்சிஜன் ஒதுக்க வேண்டும் என்று கூறி மத்திய அரசுக்கு இங்குள்ள முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் பா.ஜனதா எம்.பி.க்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா அதில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News