செய்திகள்
தேவையற்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு: பிரதமர் மோடி மீது சோனியா குற்றச்சாட்டு
கொரோனாவால் உயிருக்கு போராடி வருபவர்களின் துயரை போக்காமல் அடிப்படை பொறுப்பை மோடி அரசு தட்டி கழித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொரோனா பாதிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தமது கட்சி எம்.பி.க்கள் உடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கன்னியாகுமரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் பங்கேற்றார். காணொலி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி,
கொரோனா கட்டுப்படுத்த தேசிய அளவில் அமைக்கப்பட்ட அரசின் குழு கொரோனா 2-வது அலை குறித்து மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனாவை தோற்கடித்து விட்டதாக பிரதமர் மோடி பேசினார்.
ஆக்சிஜன், மருந்துகள், வென்டிலேட்டர் போன்ற உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற, நிபுணர்களின் அறிவுரையை மோடி அரசு புறக்கணித்துவிட்டார்.
தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்யாமல், பயன்பெறாத தேவையற்ற திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மோடி அரசு ஒதுக்கியுள்ளார்’’ எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி, கூட்ட வேண்டும் என்றும் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.