செய்திகள்
சதானந்தகவுடா

முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும்: சதானந்தகவுடா

Published On 2021-05-07 03:04 GMT   |   Update On 2021-05-07 03:04 GMT
கர்நாடகத்தில் பாதி அளவுக்கு ஊரடங்கு அமலில் உள்ளதால், பெங்களூருவில் இருக்கும் வெளியூர்க்காரர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதனால் கிராமப்புறங்களிலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு :

மத்திய உரம், ரசாயனத்துறை மந்திரி சதானந்தகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மக்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் கொரோனா பரவல் அதிகவேகமாக பரவி வருகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது. மக்களின் உயிர்களை காப்பாற்ற முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம்.

இன்றைய சூழ்நிலையில் முழு ஊரடங்கை அமல்பத்துவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.

மும்பையில் முழு ஊரடங்கால் தான் வைரஸ் பரவல் குறைந்துள்ளது. பிரதமர் ஆலோசனை கூறியபடி மாநிலங்களே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்த முடிவுகளை எடுக்க வேண்டும்.

மும்பையில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. முழு ஊரடங்கு காரணமாக அந்த எண்ணிக்கை அங்கு 2 ஆயிரமாக குறைந்துள்ளது.

மராட்டியத்தை போல் ஊரடங்கை அமல்படுத்துங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டும் கூறியுள்ளது. முதலில் உயிரை காப்பாற்றிக் கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது எனது கருத்து. மக்களின் உயிரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

கர்நாடகத்தில் பாதி அளவுக்கு ஊரடங்கு அமலில் உள்ளதால், பெங்களூருவில் இருக்கும் வெளியூர்க்காரர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதனால் கிராமப்புறங்களிலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜனை கர்நாடகத்திற்கே ஒதுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பியூஸ்கோயலை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன். அதனால் கர்நாடகத்திற்கு 975 டன் ஆக்சிஜனை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு சதானந்தகவுடா கூறினார்.
Tags:    

Similar News