செய்திகள்
உச்ச நீதிமன்றம்

கொரோனாவின் மூன்றாவது அலையை சமாளிக்க தயாராக வேண்டும் -உச்ச நீதிமன்றம்

Published On 2021-05-06 08:56 GMT   |   Update On 2021-05-06 08:56 GMT
கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க பயிற்சி முடித்த மருத்துவர்களை கொரோனா தடுப்பு பணியில் நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உக்கிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆக்சிஜன், தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரசின் மூன்றாம் அலை பரவ வாய்ப்பு உள்ளதால், அதை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும் என உச்ச  நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

3-வது அலை குழந்தைகளை கூட  தாக்கும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர், எனவே, கொரோனா 3-வது அலையை சமாளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. 

கொரோனா தொற்றுநோய் நெருக்கடியைச் சமாளிக்க, சுகாதார கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும், பயிற்சி முடித்த மருத்துவர்களை கொரோனா தடுப்பு பணியில் நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை நீதிமன்றம் வலியுறுத்தியது.

கொரோனாவின் மூன்றாவது அலை அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு மத்தியில் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், இது குழந்தைகளை பெரிய அளவில் தாக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் நிலைமையை கையாள்வது தொடர்பான உத்திகளை வகுக்க வேண்டும் என்றும் கூறினர்.
Tags:    

Similar News