செய்திகள்
மேற்கு வங்காளத்தில் தொடரும் வன்முறை... மத்திய மந்திரியின் கார் மீது தாக்குதல்
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி ஆளுநரிடம் உள்துறை அறிக்கை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்படுகின்றன. தேர்தல் சமயத்தில் இந்த மோதல் தீவிரமடைந்தது. தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதன்பின்னரும் மோதல் நீடிக்கிறது. தேர்தல் மோதல் காரணமாக மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய மந்திரி வி.முரளிதரன் மேற்கு வங்காளத்தில் பயணம் மேற்கொண்டபோது அவரது காரை ஒரு கும்பல் தாக்கி உள்ளது.
மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் பஞ்ச்குடி பகுதியில் சென்றபோது அந்த ஊரைச்சேர்ந்தவர்கள், மத்திய மந்திரி முரளிதரன் கார் அணிவகுப்பை மறித்து, தாக்குதல் நடத்தினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது. இதன் காரணமாக மத்திய மந்திரி முரளிதரன் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டார். இத்தகவலை மத்திய மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி ஆளுநரிடம் உள்துறை அறிக்கை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.