செய்திகள்
மம்தா பானர்ஜி

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி

Published On 2021-05-02 11:17 GMT   |   Update On 2021-05-02 11:17 GMT
மேற்கு வங்கத்தில் 3வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றுவருகிறது.

294 உறுப்பினர் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மார்ச் 27-ந் தேதி முதல் கடந்த 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தமிழகம், கேரளா, அசாம் போன்ற மாநிலங்களுடன் இணைந்து இந்த தேர்தல் நடத்தப்பட்டாலும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, இடதுசாரி-காங்கிரஸ் போன்ற கட்சிகளின் விடாப்பிடியான போட்டியால் மேற்கு வங்காள தேர்தல் மட்டும் நாடு முழுவதும் தனிக்கவனத்தை ஈர்த்திருந்தது.

அங்கு வேட்பாளர் மரணத்தால் 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. எனவே மீதமுள்ள 292 தொகுதிகளுக்கான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. அதைவிட சற்று குறைவான தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்தது. இதனால் இழுபறி நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதன்பின்னர், முன்னிலை நிலவரத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

212 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

மேற்கு வங்கத்தில் 3வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மேற்கு வங்கத்தில் மீண்டும் முதலமைச்சராகிறார் மம்தா பானர்ஜி.
Tags:    

Similar News