செய்திகள்
உண்மையை மறைப்பதால் கொரோனாவை தடுக்க முடியுமா? -பாஜகவுக்கு கமல் நாத் கேள்வி
பிணங்களை வைத்து பாஜக அரசியல் செய்வதாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத் விமர்சனம் செய்துள்ளார்.
போபால்:
மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கமல் நாத் கூறியதாவது:-
மத்திய பிரதேசத்தில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் மருந்து, ஊசி, ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் மற்றும் படுக்கைகள் போதுமான அளவுக்கு இல்லை. எல்லாம் போதுமான அளவிற்கு இருப்பதாக முதல்வர் கூறுகிறார். கடந்த 3 மாதங்களாக, தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவலாம் என எச்சரிக்கை விடுத்தன.
பிணங்களை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. உண்மையை மறைப்பதால் கொரோனாவை தடுக்க முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது. ஹெலிகாப்டரில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று பார்வையிடவேண்டும் என நான் அவருக்கு (முதல்வர்) அறிவுறுத்துகிறேன். எனது சக்திக்கு ஏற்ப எனது முழு ஆதரவையும் வழங்குவேன். எம்.பி.க்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி தடுப்பூசி நிறுவனங்களிடம் பேசியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய பிரதேசத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 92,773 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.