திருப்பதியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இருப்பினும் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும் ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை 15 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சித்தூர் மாவட்டம் முழுவதும் 1975 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். திருப்பதியில் மட்டும் 498 பேருக்கு தொற்று பரவியது.
இதையடுத்து இன்று முதல் திருப்பதியில் காலை 7 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என திருப்பதி மாநகராட்சி கமிஷனர் கிரிஷ் அறிவித்துள்ளார்.
தொற்று பரவல் காரணமாக திருப்பதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று 12,515 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7,022 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.72 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.