செய்திகள்
மகாராஷ்டிராவில் 18 முதல் 44 வயது வரை அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்
மகாராஷ்டிராவில் மே 1ம்தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை முழு அளவில் மேற்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மும்பை:
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. வைரஸ் பரவலை குறைக்கும் வகையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கொரோனா நிலவரம் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது அத்தியாவசியமற்ற சேவைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் நீட்டிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையின் முடிவில், 18 வயது முதல் 44 வயது வரை அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. ஆனால், மத்திய அரசு அறிவித்துள்ளபடி மே 1ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை முழு அளவில் தொடங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.