செய்திகள்
பிரதமருடனான ஆலோசனை நேரலையில் வெளியான விவகாரம்: வருத்தம் தெரிவித்தது கெஜ்ரிவால் அலுவலகம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி டெல்லி மாநில முதல்வருடன் கலந்தாலோசித்தது நேரலையில் வெளியானதால் பிரதமர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படும் 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பிரதமர் மோடி பேசிய காட்சிகள் நேரலையில் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது.
டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவது குறித்து கெஜ்ரிவால் இந்த ஆலோசனையின்போது பேசினார். டெல்லி முதல்வர் இந்த விவகாரத்தை அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டதாகவும் பொய்களை பரப்புவதாகவும் மத்திய அரசு விமர்சித்தது.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அலுவலகம் இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ பிரதமருடனான ஆலோசனையை நேரலை செய்யக்கூடாது என மத்திய அரசிடம் இருந்து வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாக எந்த அறிவுறுத்தலும் வரவில்லை.
மிகவும் ரகசியம் இல்லாத பொது முக்கியத்தும் வாய்ந்த விவகாரங்கள் இதற்கு முன்பாக பல நிகழ்வுகளில் நேரலை செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த விவாகரத்தில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் நாங்கள் மிகுந்த வருத்தம் அடைகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.