செய்திகள்
பிரதமர் மோடி ஆலோசனை

மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் -பிரதமர் வேண்டுகோள்

Published On 2021-04-23 11:22 GMT   |   Update On 2021-04-23 11:22 GMT
ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மாநிலங்கள், பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை தடுக்கக்கூடாது என பிரதமர் கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போது ஆலோசனை வழங்குகிறது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்வதில் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். அனைவரும் ஒரே நாட்டினர் என்ற நோக்கில் இணைந்து பணியாற்றினால் வளங்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது. 



மாநிலங்களுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் விரைந்து சென்றடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தில் ரெயில்வே மற்றம் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மாநிலங்கள், பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை தடுக்கக்கூடாது.

மத்திய அரசிடம் இருந்து ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் உடனடியாக தேவைக்கேற்ப ஆக்சிஜன் வழங்குவதை ஒருங்கிணைப்புக் குழு உறுதி செய்ய வேண்டும். 

இவ்வாறு பிரதமர் பேசினார்.
Tags:    

Similar News