செய்திகள்
பிரதமர் மோடி ஆலோசனை

தடையின்றி ஆக்சிஜன் சப்ளை கிடைக்க வேண்டும்- அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

Published On 2021-04-22 11:00 GMT   |   Update On 2021-04-22 11:00 GMT
அனுமதிக்கப்பட்ட பி.எஸ்.ஏ ஆக்சிஜன் ஆலைகளை விரைவில் செயல்படுத்துவதற்கு, மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கும் ஆக்சிஜன் அளவை விட அதிகம் தேவைப்படுவதால் பல மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்படுகின்றன.

இந்நிலையில், நாடு முழுவதும் ஆக்சிஜன் சப்ளை நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-



பிரதமருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது. கடந்த சில வாரங்களாக ஆக்சிஜன் சப்ளையை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். 

கடந்த சில நாட்களில், தனியார் மற்றும் பொதுத்துறை ஸ்டீல் ஆலைகள், தொழிற்சாலைகள், ஆக்சிஜன் உற்பத்தியாளர்கள் மற்றும் அத்தியாவசியமற்ற தொழில்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதை தடை செய்வதன் மூலம் கிடைக்கும் திரவ மருத்துவ ஆக்சிஜன் என ஒரு நாளைக்கு 3,300 மெட்ரிக் என்ற அளவில் ஆக்சிஜன் அதிகரித்துள்ளது. 

அனுமதிக்கப்பட்ட பி.எஸ்.ஏ ஆக்சிஜன் ஆலைகளை விரைவில் செயல்படுத்துவதற்கு, மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர். அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிரதமர், மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை சீராக, தடையின்றி நடப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News