செய்திகள்
ஆக்சிஜன் டேங்கரில் கசிவால் 22 கொரோனா நோயாளிகள் பலி... அமித் ஷா இரங்கல்
சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மாநில மந்திரி சகன் புஜ்பால் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாக்டர் ஜாகீர் உசைன் மருத்துவமனையில் இன்று ஆக்சிஜன் டேங்கரில் திடீரென கசிவு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வாயு கசிவை கட்டுப்படுத்தினர்.
எனினும் இந்த விபத்தைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கான ஆக்சிஜன் சப்ளை சிறிது நேரம் தடைபட்டதால், வென்டிலேட்டர் ஆதரவுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து செய்தியைக் கேட்டு மன வேதனை அடைந்ததாகவும், இந்த சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அமித் ஷா கூறி உள்ளார்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மாநில மந்திரி சகன் புஜ்பால் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். விரைவில் அங்கு சென்று பார்வையிட உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.