செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலை

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கொடுங்கள்... உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் மனு தாக்கல்

Published On 2021-04-21 07:56 GMT   |   Update On 2021-04-21 10:17 GMT
ஸ்டெர்லைட்டில் உள்ள 2 உற்பத்தி கூடங்களிலும் நாளொன்றுக்கு 1050 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால் பல்வேறு மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அரசு கூறி உள்ளது.



இந்நிலையில், தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், 2 உற்பத்தி கூடங்களிலும் சேர்த்து நாளொன்றுக்கு மொத்தம் 1050 டன் ஆக்சிஜன் தயாரித்து வழங்க முடியும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கேட்டு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன், தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கும் வேதாந்தா நிறுவனம் தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Tags:    

Similar News