செய்திகள்
18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு
இந்தியாவில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி (மே) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி அறிமுகம் ஆனது. அப்போது முன்கள பணியாளர்கள், சுகாதாரப் பணியார்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டது. அதன்பின் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரத்தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.