செய்திகள்
டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா... முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்பபு
டெல்லியில் மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரி பியூஷ் கோயல் ஆகியோருக்கு டெல்லி முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 25,462 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 161 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி உள்ளது. அத்துடன், வார இறுதி நாளில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை நீட்டிக்கலாம் என அரசு பரிசீலனை செய்து வருகிறது.
அதன்படி, இன்று இரவு முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா நிலவரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் அனில் பாஜ்பாயுடன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தி வருவதால், முழு ஊரடங்கு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் 100க்கும் குறைவான ஐசியூ படுக்கைகளே இருப்பதாகவும், கொரோனா நோயாளிகளுக்காக கூடுதல் படுக்கைகள் தேவை என உள்துறை மந்திரி அமித் ஷாவிடம் கேட்டதாகவும் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார்.
படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரி பியூஷ் கோயல் ஆகியோருக்கு டெல்லி முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.