செய்திகள்
கொரோனா மரண சான்றிதழ்களில் பிரதமர் மோடி படம் இடம் பெற வேண்டும்- நவாப் மாலிக்
பிரதமர் மோடி படம் தடுப்பூசி சான்றிதழ்களில் இடம் பெற்றால் கொரோனா மரண சான்றிதழ்களிலும் இடம் பெற வேண்டும் என நவாப் மாலிக் சாடியுள்ளார்.
புனே:
நாள்தோறும் 2 லட்சத்திற்கும் கூடுதலான கொரோனா பாதிப்புகளை கடந்த 3 நாட்களாக நாடு சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்துள்ளது.
மராட்டிய மந்திரி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான நவாப் மாலிக், கொரோனா பாதிப்புகள் மற்றும் மரணங்கள் நாடு முழுவதும் உயர்ந்து வருவதற்காக பிரதமர் மோடியை இன்று சாடிப்பேசினார்.
அவர் பேசும்பொழுது, கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றால் கொரோனா நோயாளியின் மரண சான்றிதழ்களிலும் அவரது படம் இடம் பெற வேண்டும் என கூறினார்.
பிரதமர் மோடி தடுப்பூசிக்கான நன்மதிப்புகளை பெற விரும்பினால், கொரோனா மரணங்களுக்கும் அவர் பொறுப்பேற்று கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.