செய்திகள்
கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 25 வயதாக குறைக்க வேண்டும்- சோனியா காந்தி கடிதம்
ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதால் ஏழைகள் மட்டுமின்றி பொருளாதார நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்படும். ஊரடங்கால் பாதிக்கப்படும் தகுதியான குடிமகன்களின் கணக்கில் மாதம் ரூபாய் 6 ஆயிரம் செலுத்த வேண்டும்.
புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,23,354 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,71,220 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 16,79,740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 11,99,37,641 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45-ல் இருந்து 25 வயதாக குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திகளுடன் ஆலோசித்த பின் சோனியா காந்தி பிரதமருக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
மேலும் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதால் ஏழைகள் மட்டுமின்றி பொருளாதார நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்படும். ஊரடங்கால் பாதிக்கப்படும் தகுதியான குடிமகன்களின் கணக்கில் மாதம் ரூபாய் 6 ஆயிரம் செலுத்த வேண்டும். மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவமனை படுக்கைகளின் கடுமையான பற்றாக்குறை பற்றிய செய்திகளைப் படிப்பது மிகவும் கவலை அளிக்கிறது.
நாடு முழுவதும் இருந்து வரும் அறிக்கைகள் கொரோனா தடுப்பூசியின் பற்றாக்குறையைப் பற்றியும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெம்ட்சிவிர் உள்ளிட்ட முக்கியமான உயிர் காக்கும் மருந்துகளைப் பற்றியும் தெரிவிக்கின்றன. எங்கள் கட்சி முன்வைக்கும் பரிந்துரைகள் உண்மையான ஜனநாயக மரபுகளின் உணர்வில் இந்திய அரசாங்கத்தால் கருதப்படுவதை உறுதி செய்வோம். இந்த சவாலான காலங்களை அரசியல் எதிரிகளாகக் காட்டிலும் இந்தியர்களாக எடுத்துக் கொள்வது உண்மையான ராஜதர்மமாக இருக்கும்” என்றும் அதில் சோனியா காந்தி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.