செய்திகள்
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

மாஸ்க் அணியாவிட்டால் 10000 ரூபாய் அபராதம்... உ.பி. முதல்வர் அதிரடி

Published On 2021-04-16 11:06 GMT   |   Update On 2021-04-16 11:14 GMT
தினசரி தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ள 10 மாவட்டங்களில் இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மே 15ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 



முக கவசம் அணியாமல் பிடிபட்டால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். முதல் முறை பிடிபட்டால் 1000 ரூபாயும், இரண்டாவது முறை பிடிபட்டால் 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். இதற்கான உத்தரவை முதலவர் யோகி ஆதித்யநாத் இன்று பிறப்பித்துள்ளார். 

தினசரி தொற்று எண்ணிக்கை 2000க்கும் அதிகமாக உள்ள 10 மாவட்டங்களில் இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. லக்னோ, வாரணாசி, பிரயாக்ராஜ் போன்ற நகரங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. உ.பி.யில் நேற்று ஒரே நாளில் 20510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1.11 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News