செய்திகள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு என கூறி வைரலாகும் தகவல்
மத்திய அரசின் கீழ் இயங்குவதாக கூறி வேலைவாய்ப்பு விளம்பரம் வெளியிட்ட நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசு வேலை வழங்குவதாக கூறும் தகவல் அடங்கிய நிறுவனத்தின் அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிக்கையில் இடம்பெற்று இருக்கும் நிறுவனம் மத்திய அரசு அங்கம் வகிப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் அறிக்கையில் இருக்கும் பயோ கெமிக் எட்யூகேஷன் கிராண்ட் கமிஷன் எனும் பெயர் கொண்ட நிறுவனம் மத்திய அரசு வேலை வழங்குவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை வைரலானதை தொடர்ந்து மத்திய அரசின் கீழ் இயங்குவதாக கூறும் நிறுவனம் போலியானது என பல்கலைக்கழக மாணிய குழு தெரிவித்துள்ளது.
மேலும் வேலை வாய்ப்பு குறித்து வெளியான விளம்பரத்தை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், மத்திய அரசின் கீழ் இயங்குவதாக கூறி விளம்பரம் வெளியிட்ட நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பல்கலைக்கழக மாணிய குழு தெரிவித்து இருக்கிறது.
மத்திய அரசு வேலைவாய்ப்பு தொடர்பாக வலம் வரும் தகவல்களை நன்கு ஆய்வு செய்ய அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் பலமுறை தெரிவித்துள்ளன. இதுபோன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறதா என ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.