செய்திகள்
ராஜஸ்தானில் வரும் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
இன்று ஒரே நாளில் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 6,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஜெய்பூர்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் பதிவாகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் அங்கு மாநிலம் முழுவதும் 6,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று 29 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ள நிலையில், 1,956 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 16 முதல் 30-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவின்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.