செய்திகள்
கொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட யோகி ஆதித்யநாத்
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உ.பி. முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
லக்னோ:
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் அரசியல் தலைவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்தில் உள்ள சில ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து யோகி ஆதித்யநாத், முன்னெச்சரிக்கையாக தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். வீட்டில் இருந்தே காணொளி வாயிலாக பணிகளை கவனிக்க உள்ளதாகவும் கூறியிருந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.
இந்நிலையில், யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி, தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.84 லட்சம் என்ற அளவில் உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.