கொரோனா பரவல் எதிரொலி- திருப்பதியில் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது
திருமலை:
திருப்பதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக நேற்று முன்தினம் முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
நேற்று திருப்பதியில் 28 ஆயிரத்து 472 பேர் சாமி தரிசனம் செய்தனர் 10 ஆயிரத்து 732 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக 2.01 கோடி வசூல் ஆனது.
இந்த நிலையில் திருப்பதியில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருப்பதி நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஊரகப் பகுதியில் 80 பேரும், காளகஸ்தியில் 32 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சித்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் கொரோனா தொற்றில் இறந்துள்ளனர்.
சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஆந்திரா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.