செய்திகள்
பயன்படுத்தப்பட்ட முக கவசங்கள்

அதிர்ச்சி... பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை வைத்து மெத்தை தயாரித்த நிறுவனம்

Published On 2021-04-12 07:14 GMT   |   Update On 2021-04-12 07:14 GMT
மெத்தை தயாரிப்பு நிறுவன வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த முக கவசங்களை போலீசார் கைப்பற்றி தீயிட்டு அழித்தனர்.
மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசங்கள் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில், பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை பயன்படுத்தி மெத்தை தயாரித்த நிறுவனத்தை போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 



மும்பையில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குசம்பா கிராமத்தில் இந்த மெத்தை தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. பருத்தி மற்றும் பிற மூலப்பொருட்களை பயன்படுத்தி மெத்தை தயாரிப்பதற்கு பதிலாக, பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை அடைத்து மெத்தை தயாரித்துள்ளனர். இது தொடர்பாக மெத்தை தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்த தொழிலில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

மெத்தை தயாரிப்பு நிறுவன வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த முக கவசங்களை போலீசார் கைப்பற்றி தீயிட்டு அழித்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு போராடி வரும் நிலையில், நோய் பரப்பும் கிருமிகள் கொண்ட முக கவசங்களை மெத்தை தயாரிப்புக்கு பயன்படுத்திய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News