செய்திகள்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடானது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என கூறி தடை கோரினார்.
புதுடெல்லி:
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உள்ஒதுக்கீட்டு சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து மதுரை பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த அபிஷ் குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த இடஒதுக்கீடானது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என கூறி தடை கோரினார்.
இருப்பினும் சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கு பற்றி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.