கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட தொண்டர் விபத்தில் பலி
திருவனந்தபுரம்:
கேரள சட்டசபை தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. முக்கிய தலைவர்கள் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ரோடுஷோ, வாகன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கேரள மாநிலம் ஆரியநாடு சட்ட சபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சபரிநாதன் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமான கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர்.
இந்த ஊர்வலத்தில் திருவனந்தபுரம் அருகே பெரியநாடு பகுதியை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் பிரதீப் மோட்டார் சைக்கிளில் கலந்து கொண்டார். அவரது மோட்டார் சைக்கிளின் பின்னால் அனு என்பவர் இருந்தார்.
அவர்கள் சாலகோணம் பகுதியில் வந்த போது சாலையோரம் நின்ற ஒரு காரின் கதவை திடீரென திறந்ததால் பிரதீப் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து ரோட்டில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த கேரள அரசு பஸ் சக்கரத்தில் சிக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை ஊர்வலத்தில் வந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.