செய்திகள்
எடியூரப்பாஎடியூரப்பா பெங்களூருவில் சுகாதாரத் துறை மற்றும் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்திய போது எடுத்த படம்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் ஊரடங்கு கிடையாது: எடியூரப்பா

Published On 2021-03-30 01:55 GMT   |   Update On 2021-03-30 01:55 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் ஊரடங்கு கிடையாது என்றும், இன்னும் 15 நாட்கள் போராட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
பெங்களூரு :

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையடுத்து, கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று மாலையில் மந்திரிகள், அரசு அதிகாரிகள், சுகாதாரத் துறை நிபுணர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், வருவாய்த்துறை மந்திரி அசோக், பள்ளி, கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக பெங்களூரு நகரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி கமிஷனர், நிர்வாக அதிகாரி மற்றும் நிபுணர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசித்தார். இதற்காக கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து பரிசோதனை நடத்தவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் முகக்கவசம் அணியாததே என்று அதிகாரிகளிடம் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார். இதனால் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக சுற்றி திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் மாநிலத்தில் குறைந்த அளவே கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் ஊரடங்கோ, இரவு நேர ஊரடங்கோ அமல்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் மற்றும் நிபுணர்களிடம் முதல்-மந்திரி எடியூரப்பா திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

“பெங்களூரு உள்பட மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளேன். நிபுணர்கள் கூறிய பரிந்துரைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பெங்களூருவில் கடந்த பிப்ரவரி மாதம் 0.94 சதவீதம் இருந்த பாதிப்பு தற்போது 1.94 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்காக பெங்களூருவில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

90 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளே நடத்தப்பட்டு வருகிறது. பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. கோரமங்களா உள்விளையாட்டு அரங்கத்தில் 250 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கொரோனா மையம் அமைக்கப்பட்டு உள்ளது. வருகிற 5-ந் தேதி முதல் அந்த மையம் செயல்பட தொடங்கும். எச்.ஏ.எல் மற்றும் ஹஜ் பவனில் தலா 100 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க ஒவ்வொரு வார்டிலும் 2 நடமாடும் பரிசோதனை வாகனத்தில் சுகாதாரத்துறையினர் வலம் வருவார்கள். கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிய வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகரில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் 1,166 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் ஒதுக்கும்படி கேட்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் 8 மண்டலங்களிலும் கொரோனா பரவலை கண்காணிக்கவும், அதனை தடுக்கவும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நிதி பிரச்சினை இல்லை. இதற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை ஒவ்வொரு வரும் கடைப்பிடிக்க வேண்டும்.

பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருக்க கூடாது. மக்கள் அலட்சியம் காட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு விதிக்கப்படுவதாக தகவல்கள் பரவுகின்றன. கர்நாடகத்தில் எக்காரணத்தை கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படாது.

மராட்டிய மாநிலத்தில் தற்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தினசரி கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. கொரோனாவுக்காக பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் குறைவாகும். அதனால் கொரோனாவுக்காக ஊரடங்கு அமல்படுத்தப்படாது. மக்கள் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை.

பெங்களூருவில் குடிசை பகுதிகளில் கொரோனா பரவல் இல்லை என்றும், அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் கொரோனா பரவல் இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் விருந்து நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி மாநிலம் முழுவதும் இன்னும் 15 நாட்கள் ஊர்வலங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்களிலும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகப்படியானோர் கூடுவதற்கு அனுமதி கிடையாது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 6.61 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News