செய்திகள்
இலவச தடுப்பூசி போடப்பட்டதாக கூறி வைரலாகும் தகவல்
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது பொது மக்களுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது 12 நோய்களுக்கான தடுப்பூசி பொது மக்களுக்கு இலவசமாக போடப்பட்டது என்றும், தற்போதைய பாஜக ஆட்சியில் கொரோனாவைரஸ் தடுப்பூசிக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ. 250 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என கூறும் தகவல் அடங்கிய படத்தை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதே படங்களை காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாநிலங்களுக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களிலும் பதிவிடப்பட்டு இருக்கிறது. இவற்றை காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி அக்கட்சி தொண்டர்கள் மற்றும் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ள 12 நோய்களுக்கான தடுப்பூசிகளும் தேசிய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் விரிவாக்கப்பட்ட தடுப்பு மருந்து திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு இலவசமாக போடப்பட்டவற்றை குறிக்கிறது.
இந்த திட்டத்தில் நாடு முழுக்க 2.67 கோடி பச்சிளம் குழந்தைகள் மற்றும் 2.9 கோடி கருவுற்ற பெண்களுக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போதும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு அரசு சார்பில் இலவச தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனினும், தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடப்படுவதில்லை.
அந்த வகையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சி காலக்கட்டத்தில் மத்திய அரசு விரிவாக்கப்பட்ட தடுப்பு மருந்து திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டு வருவது உறுதியாகி இருக்கிறது. இரு கட்சிகளின் ஆட்சியிலும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக போடப்படவில்லை என்பதும் தெளிவாகி விட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.