செய்திகள்
பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசு தயார் - அனுராக் தாக்குர்
பெட்ரோலியப் பொருட்களுக்கு மத்திய அரசு கலால் வரியும், மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரியும் விதிப்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 1,425 ரூபாயாக இருந்தது. இது தற்போது 4,875 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஜனதா தளம் (யுனைடெட்) மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய நிதித் துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது குறித்து பரிசீலிக்க தயாராக உள்ளது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைப்பது குறித்து ஆலோசித்து முன் வரவேண்டும். இருதரப்பும் இணைந்து செயல்பட்டால் தான் மக்கள் உரிய பலனை பெறமுடியும்.
.பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வர மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், இதை மாநிலங்கள் ஆதரிக்க முன்வரவில்லை. அவ்வாறு வந்தால் அது குறித்து பேச்சு நடத்த மத்திய அரசுக்கு ஆட்சேபணை இல்லை என தெரிவித்தார்.