செய்திகள்
வெடிபொருட்களுடன் நிறுத்தப்பட்டிருந்த கார்

அம்பானி வீட்டருகே காரில் வெடிபொருள் சிக்கிய வழக்கு - போலீஸ் அதிகாரியை கைது செய்தது என்.ஐ.ஏ.

Published On 2021-03-15 00:24 GMT   |   Update On 2021-03-15 00:24 GMT
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கு மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை:

தென்மும்பையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே கடந்த மாதம் 25-ம் தேதி வெடிபொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து காரின் உரிமையாளர் ஹிரேன் மன்சுக்கை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மர்ம நபர்கள் தனது காரை திருடி வெடிபொருட்களுடன் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே நிறுத்தியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார். இந்த சம்பவத்தில், துப்பு துலக்க முடியாமல் போலீசார் இருந்தனர்.

இதற்கிடையே, வெடிபொருட்களுடன் நின்ற காரின் உரிமையாளர் ஹிரேன் மன்சுக் கடந்த 5-ம் தேதி தானே கழிமுகப் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். இது வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, மர்ம நபர்கள் காரை திருடி வெடிபொருட்களுடன் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே நிறுத்தியதாக ஹிரேன் மன்சுக் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார்.

இந்நிலையில் வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட சம்பவம் மற்றும் ஹிரேன் மன்சுக் மரணத்தில் போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேவுக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அவரை பணியிடைநீக்கம் செய்து, கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியது. 

இதேபோல ஹிரேன் மன்சுக்கின் மனைவியும் கணவரின் மரணத்தில் சச்சின் வாசேவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து மாநில அரசு சச்சின் வாசேவை குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து பொதுமக்கள் குறைதீா்ப்பு மையத்திற்கு மாற்றியது.

மேலும், ஹிரேன் மன்சுக் மரணம் தொடர்பாக மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணையை தொடங்கியது. இதற்கு முதல்-மந்திாி உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணைக்காக சச்சின் வாசே காலை 11.30 மணியளவில் தென்மும்பை கம்பாலா ஹில் பகுதியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் வழக்கு தொடர்பாக அதிகாரிகள் சுமார் 12 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். இரவு 11.30 மணியளவில் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவை என்.ஐ.ஏ. அதிரடியாக கைது செய்தது. இது குறித்த தகவலை என்.ஐ.ஏ. செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு இருப்பது போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News