செய்திகள்
இது கேரளா... அந்த வேலை எல்லாம் இங்கே எடுபடாது -அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த பினராயி விஜயன்
தங்கக் கடத்தல் வழக்கை விசாரணை முகமைகள் நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசுகையில், கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக, முதல்வர் பினராயி விஜயனுக்கு 7 கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு பினராயி விஜயன் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று பேசுகையில், திருவனந்தபுரம் விமான நிலையம் முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறினார். அவர் மேலும் பேசியதாவது:-
பாஜக ஆட்சிக்கு வந்தபின் திருவனந்தபுரம் விமான நிலையம் தங்கக் கடத்தலின் மையமாக மாறியது எப்படி? அதற்கு அமித் ஷா பதிலளிக்க வேண்டும். இதற்கு பதிலளிக்கும் பொறுப்பு கேரள முதல்வருக்கு அல்ல, அமித் ஷாவுக்கு உள்ளது.
விசாரணை முகமைகள், தங்கக் கடத்தல் வழக்கை நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யவில்லை என்றால், யாரையும் அச்சுறுத்தலாம் என்று அவர்கள் நினைத்தால், அது இங்கே எடுபடாது. இது கேரளா.
இவ்வாறு அவர் கூறினார்.