செய்திகள்
5 மாநில தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
பிரதமர் பொதுவானவர் என்பதால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.
புதுடெல்லி:
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல். சர்மா இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பிரதமர் பொதுவானவர் என்பதால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த மனு மீது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு மார்ச் 9-ம் தேதி விசாரணை நடத்த உள்ளது.