செய்திகள்
வெடிபொருட்களுடன் நிறுத்தப்பட்டிருந்த கார்

அம்பானி வீட்டருகே வெடிபொருட்களுடன் நின்ற காரின் உரிமையாளர் மரணம்- வழக்கில் திடீர் திருப்பம்

Published On 2021-03-05 14:03 GMT   |   Update On 2021-03-05 14:03 GMT
காரின் உரிமையாளர் விக்ரோலி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், கார் திருடப்பட்டு அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்டதும் தெரியவந்தது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் வெடிபொருட்களுடன் மர்ம கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அதிலிருந்து முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவிக்கு எழுதப்பட்டு இருந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதமும் மீட்கப்பட்டது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அந்த காரின் உரிமையாளர் விக்ரோலி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், கார் திருடப்பட்டு அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்டதும் தெரியவந்தது.  

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்திய நபர் முக கவசம் அணிந்து வந்தார். அதனால் அவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. அந்த கார் தொடர்புடைய மற்றொரு சிசிடிவி பதிவும் காவல்துறை வசம் கிடைத்தது. அதில், மும்பை நகருக்குள் அந்த கார் செல்வதும், அதைத் தொடர்ந்து ஒரு இன்னோவா கார் செல்வதும் தெரியவந்தது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காரின் உரிமையாளர் திடீரென மரணம் அடைந்துள்ளார். இது வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் மும்பை அருகே உள்ள ஓடைப்பகுதியில் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தாலும், தற்போதைக்கு விபத்து மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. 
Tags:    

Similar News