செய்திகள்
கேரள சட்டசபை தேர்தல்- மெட்ரோ மேன் ஸ்ரீதரன் பாஜக முதல்வர் வேட்பாளர்
கேரள மக்கள் பாஜகவை ஆட்சிக்கு தேர்ந்தெடுப்பார்கள் என்று மெட்ரோ மேன் ஸ்ரீதரன் நம்பிக்கை தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:
மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன் கடந்த வாரம் பாஜகவில் இணைந்தார். அப்போது கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், கேரளாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முதல் மந்திரி பதவி வகிக்கவும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக மாநில தலைவர் சுரேந்திரன் கூறி உள்ளார்.
‘மக்கள் தங்களுக்கு எது நல்லது, மாநிலத்திற்கு எது நல்லது? என்பதை நன்கு அறிவார்கள். அவர்கள் பாஜகவை ஆட்சிக்கு தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். பாஜகவுக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்’ என ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்த ஸ்ரீதரன் டெல்லி, கொச்சி மெட்ரோ திட்டங்களின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
140 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டசபைக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.